×

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஓசூரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரை என்பவரது மகன் ஹரிகரன் (16). இவர் செங்கல்பட்டில் அரசு உதவிபெறும் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது சித்தப்பா மகன் லோகேஷூடன் செங்கல்பட்டு பழவேலி பகுதி பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். குளிக்கும்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற ஹரிகரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரழந்தார். இதனையடுத்து அவரது சடலத்தை மீட்பதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் 2 குழுக்களாக பிரிந்து படகுமூலம் நேற்று முன்தினம் இரவு 7 மணிவரை தேடினர். ஆனால் ஹரிகரனின் சடலம் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினர். அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிமுதல் மீண்டும் தேடும் பணியை அவர்கள் தொடங்கினர். இதில் சுமார் 11 மணி நேரமாக போராடி ஹரிகரனின் சடலத்தை மீட்டனர். அப்போது அங்கிருந்த ஹரிகரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Harikaran ,Durai ,Osuramman Koil Street ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!